Sunday, November 05, 2017

தங்கள் தலைவியையே காப்பாற்ற இயலாதவர்கள் தமிழகத்தை காப்பார்களா ?

தங்கள் தலைவியையே காப்பாற்ற இயலாதவர்கள் தமிழகத்தை காப்பார்களா ? 

சென்னை மக்கள் இந்த வருடம் கொஞ்சம் கவலையோடுதான் இருக்கிறார்கள்.

2015 ல் வெள்ளம் .
2016 ல் புயல் 
2017 ல் என்னவாகுமோ?

வெதர் மேன் ரிப்போர்ட் என்ன சொல்லுது?
பிபிசி ல என்ன சொல்லுறாங்க ?
நாசா போர்க்காஸ்ட்  என்ன?

நல்லபடியா நவம்பர் டிசம்பர்  மாதங்கள் இருக்குமா?
இப்படி நிறைய கேள்விகள்.

கடந்த 6 மாதமாக
ஊரெல்லாம் தோண்டி போட்டு இருக்கிறார்கள். வடிகால் வாய்க்கால் திட்டத்திற்கு. எதுவும் முழுமையாக முடிந்த மாதிரி தெரியவில்லை. பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது . 2 சக்கர வண்டி ஓட்டுபவர்கள், 4 சக்கர வண்டி ஓட்டுபவர்கள்  முதுகு வலியோடும், கழுத்து வலியோடும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
நெடுவாசல் கதிரமங்கலத்தில் மக்கள் போராடினார்கள். விவசாயிகள் டெல்லிக்கு போய்  போராடினார்கள். சமூகப்போராளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிஜேபியினர் தமிழக ஆளும்கட்சி போலறிக்கை விட்டு கொண்டு இருந்தனர்.
இரண்டு மூணாச்சு. மூணு ரெண்டாச்சு.
 அதிமுகவில் எல்லா அணிகளிலும் எல்லோரும் பேசினர். தமிழ் பட கிளைமாக்ஸ் காட்சி  போல் கவர்னர் இ பி எஸ் , ஓ பி எஸ் கைகளை பிடித்து சேர்த்து வைத்தார். பொலிடிகல் ஸ்லீப்பர் செல் பற்றி தமிழகம் அறிந்து கொண்டது. ஒரு எம் எல் ஏ க்கள் குழு ரெசார்ட்களுக்கு மீண்டும் டூர் போனார்கள். டூர் போனவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மைனாரிட்டி அரசு  அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மைனாரிட்டி, குதிரை பேர, பினாமி அரசு நீக்கப்படவேண்டும் என்றார்.
அதிமுக அணிகளில் ஒரு அணி ஓ பி எஸ் ம் ஸ்டாலினும் கூட்டு என்றனர். இன்னொரு அணி எடப்பாடியும் ஸ்டாலினும் அண்டர்ஸ்டாண்டிங்கில் உள்ளனர் என்றார்கள். வேறுஒரு அணி ஸ்டாலினும் தினகரனும் இணைந்து செயல்படுவதாக சொன்னார்கள். பத்திரிக்கைகள், மீடியாக்கள்  அதிமுக அணிகள் பிரிந்தால் திமுகவிற்கு பாதிப்பா  என்றார்கள். அணிகள் இணைந்தால் திமுகவிற்கு இழப்பா  என்றார்கள். வெய்யில்  அடித்தால்  திமுகவிற்கு சரிவா என்றார்கள். மழை பெய்தால் திமுக எதிர் கட்சியாக செயல்படவில்லை என்றார்கள். 
 நீட்  விவகாரத்தில் மத்திய மாநில  அரசுகள் கடைசியில் கைவிரித்தது. மாணவி அனிதா உயிர் போனது. சீமான் ரஞ்சித் மீது பாய்ந்தார். தமிழிசை நீட்டுக்கு எதிரானவர்களை கடுமையாக விமர்சித்தார்.
டெங்குவால் தினமும் எட்டு பேர் பத்து  பேர் என   இறந்தனர். முதல்வர் எடப்பாடி ஆட்டமுடியாது அசைக்கமுடியாது என்று எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் இருந்தார்.
சிலர் திராவிடம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்  என்றார்கள். தமிழ் தேசியம் தான்  தீர்வு என்றார்கள்.
வரப்போகிறேன் என்று ரஜினியும், வந்துவிட்டேன் என்று கமலும் அரசியல் படம் காட்டிக்கொண்டு  இருந்தனர். 
பிரதமர் ஜி எஸ் டி அமல்படுத்தினார். பக்தர்கள் இன்னுமொரு புது இந்தியா பிறந்துவிட்டதாக குதூகலித்தனர். டீ  காபி முதல் மருந்து வரை எல்லாம் விலை ஏறியது.
விஜய் படத்தில் அரசியல் பேசினார். எச் ராஜா மத்திய அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரையும் தேசத்துரோகி என்றார்.
ஸ்டாலின் இந்த ஆட்சியை அகற்ற மக்களை சந்திக்க போவதாக சுற்றுப்பயணம் அறிவித்தார்.
அதிமுக அணிகள் இரட்டை இலை  எங்களுக்குத்தான் எங்களுக்குத்தான் என்றார்கள்.
மக்கள் இந்த ஆட்சி எப்போ கவிழும் என்று காத்திருந்தார்கள்.

இப்படியாக சென்று கொண்டிருக்கையில் வடகிழக்கு பருவமழை வந்தது.
பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அரசு அறிவித்தது. இத்தனை  கோடிக்கு இந்த திட்டம் அத்தனை கோடிக்கு அந்த திட்டம் என்று அறிக்கை தந்தனர்.

ஒரு நாள் மழையிலேயே சென்னை விழி பிதுங்கியது.
லண்டன் அமெரிக்காவைவிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஒரு அமைச்சர் சொன்னார். மழை பெய்தல் தண்ணீர் தேங்கும் என இன்னொரு அமைச்சர் சொன்னார்.
மின்கசிவால் இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
ஊருக்குபோயிருந்த முதல்வரும் துணை முதல்வரும் திரும்பி வந்து பாதிப்புகள் அதிகமாக இல்லை என்றார்கள். டெல்லிக்கு இலை கேட்க போன அமைச்சர்களும் திரும்பி வந்து தண்ணீர் வடிந்துவிட்டது என்றார்கள். டிவியில் காட்சிகள் வேறுமாதிரி இருந்தன. 2015 ஐ ஞாபகப்படுத்தின.
 ஊரெல்லாம் வெள்ளக்காடு. மீண்டும் மழை வருமாம். 
இப்போதிருக்கிற பெரிய  கேள்வி 

தங்கள் தலைவியையே காப்பாற்ற இயலாதவர்கள் தமிழகத்தை காப்பார்களா ? 



No comments:

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...